Friday 16 November 2012

9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்து : உடனே நீக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்


நாடார்கள் குறித்து அவதூறாக சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், தமிழகத்தின் ஒரு பிரிவினரான நாடார்களை இழிவு படுத்தும் விதத்தில் பாடம் இடம்பெற்றிருப்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பாடத்தில், சாதிய ரீதியில் இவை அணுகப் பட்டிருக்கின்றன. சாதிப் பிரச்னையும் உடுப்பு மாற்றமும் என்ற பாடத்தில், தென்னகத்தில் நடத்திய தோள் சீலைப் போராட்டம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடர்புடைய ஒரு பகுதி மக்களை இவ்வாறு சித்திரிப்பது நவீன சமுதாயத்துக்கு உகந்ததல்ல. எனவே, இந்தப் பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்

நெல்லை,நவ.17 - நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சிவா (29), தங்கசாமி (17), மாரிசாமி (19), சங்கரநாராயணன் (22), சக்திகணபதி (23), மணிகண்டன் (29), மருதுபாண்டி (24), காளிராஜ் (26), சபரி (21), ராஜ்குமார் (28) ஆகியோர் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும் கேளர மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேனில் சுற்றுலா சென்றனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த சந்திரகருப்பசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். இவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று முன்தினம் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அங்கு திற்பரப்பு, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்பு நள்ளிரவு அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களது வேன் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நெல்லையை அடுத்துள்ள கங்கைகொண்டான் ராஜாபுதுக்குடியிருப்பு பகுதியில் வந்தபோது திடீரென பழுதானது. இதனைத்தொடர்ந்து வேனை டிரைவர் ரோட்டில் ஓரமாக நிறுத்தி பழுதானதை சரிசெய்து கொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால் வேனில் வந்தவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து நெல்லைக்கு முட்டை ஏற்றி வந்த லாரி நெல்லையில் முட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற வேன்  மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் சிவா, சபரி, ராஜ்குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். மேலும் வேன் டிரைவர் சந்திரகருப்பசாமி, காளிராஜ், மருதபாண்டி, சக்திகணபதி, மாரிசாமி,  தங்கசாமி ஆகியோர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈ்டுபட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Wednesday 24 October 2012

தமிழக அரசின் மின் தேவைபரிசீலிக்கப்படும்மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால்

தமிழக அரசின் மின் தேவை குறித்து முதல்வரின் கடிதம் பரிசீலிக்கப்படும் என மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் மின்சார சேவை கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் மத்திய அரசு தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு குறித்து அறிந்துள்ளது,  இது தொடர்பாக தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ள வேணுகோபால் மின்சாரம் வரும் வழித்தடங்களில் சில பிரச்னைகள் இருப்பதாலே தமிழகத்துக்கு மின் தட்டுப்பாடு பிரச்சனை இருப்பதாகவும் 2014க்குள் இவை அனைத்தும் சீர்செய்யப்பட்டு மின் வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும் எனவும் கூறியிருப்பதாக தெரிகிறது. கூடங்குளம் உற்பத்தியில் தமிழகத்திற்கான மின்சார ஒதுக்கீடு குறித்து, மத்திய அரசே முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று உறுதியானத் தகவல் வெளியாகி உள்ளது.
பலதடவை மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்த முறை கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ந் திகதி திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சரவையில் ரயில்வேத் துறை உள்ளிட்ட 6 அமைச்சரவைப் பதவிகள் காலியாக இருக்கின்றன

மேலும் பல முக்கிய அமைச்சர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த முறை முக்கியமாக சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் தெரிகிறது. அவர் புனித ஹஜ் பயணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதால், இந்த முறை ராஜினாமா செய்து விட்டு புனித பயணம் மேற்கொண்ட பின்னர், 2014 க்கான தேர்தல் கள  கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

ராகுல் காந்தி இந்த முறையும் அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொள்வது சந்தேகமே என்று தெரிகிறது. மாறாக இவர் ஆதரவு பெற்ற இளம் எம்பிக்களுக்கு, இந்த முறை அமைச்சர் பதவி கொடுக்கப் படும் என்றும் தெரிகிறது.

Tuesday 23 October 2012

முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.

திடீரென்று மதுரை சென்று, தனது சகோதரர் முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.
விபரம் கேட்டபோது கூற மறுத்து விட்டதாக தெரிகிறது.

முக அழகிரியை சந்திப்பதற்காக ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மதுரைக்கு சென்றிருந்ததாக தெரிகிறது. இருவரும் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றி உள்ளனர். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மீதான புகார் குறித்தும் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளது குறித்தும் பேச்சுவாரத்தை நடத்தியிருப்பார்கள் என்று பலரும் கணித்தாலும் சந்திப்பிற்கான காரணத்தைக் கூற ஸ்டாலின் மறுத்து விட்டதாகத் கூறப்படுகிறது.

மாறாக, அதிமுக எம்பி தம்பிதுரை மீதான நில மோசடி வழக்கை ஜெயலலிதா தலைமையிலான காவல்துறையினர் விசாரிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கிரானைட் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, தொடர்ந்து தலைமறைவில் இருக்கும் துரை தயாநிதியை பற்றி தெரிந்து கொள்ள, தனிப்படையினர் நேற்று நடிகர் மகத்திடம் விசாரணையைத் துவக்கி உள்ளனர் என்று தெரிகிறது. மங்காத்தா படத்தில் நடித்து இருக்கும் நடிகர் மகத் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் என்றும், இதன் காரணமாகவே மகத்திடம் காவல்துறை தனிப்படையினர் விசாரணையைத் துவக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சின்மயி விவகாரம் : சமூக வலைத்தளங்களால் ஒருவர் கைதாவது இதுவே முதன்முறை?

தென்னிந்திய பாடகி சின்மயி பற்றி டுவிட்டர் மூலம் அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்மயின் புகாரின் பெயரில் சென்னை மாநகர காவல்துறையினரின் கணிணி குற்றப்பிரிவினர் குறித்த பேராசிரியர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இக்கைது இடம்பெற்றுள்ளது.  இப்பின்னணியில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல்தடவை என கூறப்படுகிறது. 

சமீப காலமாக, அரசியல் பிரபலங்களையும், என்னை போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் உளட்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்துவருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள சின்மயி, இதனால் தன்னை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், குறித்த 6 பேர் கொண்ட கும்பல் தம்மை பற்றி அவதூறு பரப்பலை நிறுத்தவில்லை எனவும் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Thursday 13 September 2012

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்திருந்தார்.
அவரை ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரமாண்டமாக வரவேற்றனர்.

இதனிடையே  காலை தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், பழனி முருகன் கோவிலில் தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதின் படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

இதனிடையே ஸ்ரீரங்கத்தில் நடந்த  விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி மேலூரில் 10 எக்டேர் பரப்பளவில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைய உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதனுடன் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் நகரங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்ததுடன் திருச்சி விமான நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் இருந்தது.

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிசக்தி நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பூவுலக நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையிட்டனர்.

அணுச்அக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளில் 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதம் 9 பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்க் வந்த போது மனு தாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

'எனினும் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க முடியாது. நாங்கள் மனுதாரருக்கோ கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அங்கு வாழும் ஏழை மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் கொடுக்கிறோம். அவர்களது பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு தங்களது வாழ்க்கை பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 20 ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.எஸ். பஜாஜ் தெரிவித்துள்ளார்.

அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, அணு மின் நிலையத்தின் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், தாம் ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பாக வழங்கிய 17 பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை நிறைவேற்றும் பணி கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளால் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து பரிந்துரைகளையும் 6 மாதம் தொடக்கி 2 வருடங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Friday 7 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்து12பேரை கைது

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்துத் தொடர்பாக போலீசார் 12பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிகிறது.
நேற்று முன் தினம் சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 38 பேர் பலியானதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். விருதுநகர், சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 40பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவ் விபத்துத் தொடர்பாக போலீசார் குத்தகைதாரர் பால்பாண்டி உள்பட 12பேரை கைது செய்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன் தலைமறைவாகிவிட்டதால் அவரை தீவிரமாக போலிசார் தேடிவருகிறார்கள். கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின்பேரில்  இவ் 12பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதே வேளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த விபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி நீதி விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விசாரனையும் இன்றே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில்  பட்டாசு தொழிற்சாலையின் ஆவணங்களை பரிசீலிப்பதுடன் விதிமுறைகள் மீறி செயல்பட்டிருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளதால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருது நகர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து விசாரணை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Saturday 25 August 2012

கடுமையானமழைக்கு20 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.

AddThis Social Bookmark Button

நேற்று வியாழக்கிழமை பாகிஸ்தானிலும் இந்தியாவின் வடக்கு ராஜஸ்தான் மாநிலத்திலும் பெய்த கடுமையான மொன்சூன் மழையால் கடும் வெள்ளப் பெருக்குஏற்பட்டதுடன் மண் சரிவுகளும் நிகழ்ந்துள்ளன.
இதனால் பாகிஸ்தானில் மட்டும் உத்தியோகபூர்வமான தகவலாக 21 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பு மேலும் தெரிவிக்கையில் காஷ்மீர் பகுதியிலுள்ள முஷ்ஷாஃபரபாட் நகரில் மிகப் பெரிய மண்சரிவு ஒன்று நிகழ்ந்திருப்பதாகவும் இதில் பல பொது மக்கள் சிக்கியிருப்பதாகவும் இவர்களை மீட்பதற்கு மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப், கிபெர் பக்துங்க்வா எனும் பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி என்பவற்றையே வெள்ளம் தாக்கியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் முக்கியமான சாலைகள் சில முடக்கப்பட்டும் கிட்டத்தட்ட 390 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் ராஜஸ்தானில் 4 நாட்களாகக் கடுமையாகப் பெய்து வந்த மழை காரணமாக நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதுடன் 20 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.  இதில் 10 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

Wednesday 15 August 2012

11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்முதல்வர் ஜெயலலிதா

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இன்று காலை அவர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகையிலேயே அவ்வாறு குறிப்பிட்டார். முதல்வர் கொடியேற்றி வைத்ததைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் பின் உரையாற்றுகையில், இன்றைய சுதந்திர நன்நாளில், சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். நாட்டின் 66வது சுதந்திர தினத்தில் 12வது முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது, சுதந்திரத்துக்காக அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Thursday 9 August 2012

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்குஅழைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டு 2012 ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி 150வது ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் நேற்று மதியம் போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்

Wednesday 8 August 2012

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல, தொடர்ந்து  இரண்டாவது முறையும் வெற்றி பெற்ற பெருமை பெறுகிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பாக குடியரசுத் துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட தற்போதைய குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி, எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார். பதிவான 790 வாக்குகளில் 490 வாக்குகள் அமீத் அன்சாரிக்கும், 238 வாக்குகள் ஜஸ்வந்த் சிங்குக்கும் விழுந்திருக்கிறது. இதில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகள்.
     
இதனால் அமீத் அன்சாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. எதிர்வரும் 11ம் திகதி அமீத் அன்சாரி பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாகவும் டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 1937 இல் பிறந்த அமீத் அன்சாரி 2 முறை டாக்டர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய வெளியுறவு பணியாளராக பலநாடுகளிலும் சிறப்பாக செயலாற்றியவர் அமீத் அன்சாரி என்பதும், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற துணைக் குடியரசுத்  தலைவர் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Saturday 4 August 2012

புனித பயணம் செல்வோருக்கு மானியம்: ஜெயலலிதா உத்தரவு


முதல் அமைச்சர் ஜெயலலிதா புனித பயணம் செல்லும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்த பெருமக்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:"ஜாதி மதங்கள் பாரோம்'' என்ற பாரதியின் கூற்றுப்படி, முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாகக் கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப் படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளிக்கப்பட்டது.

அந்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500  கிறிஸ்துவர்கள் சென்றுவர அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளார்.

இதேபோன்று, சீனாவில் உள்ள  மானசரோவர் மற்றும் 108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தெரிவு செய்யப்படும் தமிழ் நாட்டைச் சார்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் ஆக மொத்தம் 500 பேருக்கு ஆண்டு தோறும் அரசு மானியம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 1 லட்சம் ரூபா யில் 40,000 ரூபாய் வீதம் 250 நபர்களுக்கென 1 கோடி ரூபாயும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 25,000 ரூபாயில் 10,000 ரூபாய் வீதம் 250 யாத்ரிகர்களுக்கென 25 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும்.  வரப் பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Thursday 2 August 2012

தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள்அன்னா ஹசாரே,


மக்களின் நலனுக்காக மாற்று அரசியல் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரே நாளை மாலை தங்கள் குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இன்று முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தனர்.

அந்த கடிதத்தை அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத மேடையில் ஹிந்தி நடிகர் அனுபம்கெர் வாசித்தார். அந்த கடிதத்தில் உங்களின் இந்த உணர்வுக்கு மத்தய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. ஆனால், உங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், மக்களுக்கு நன்மை கிடைக்க வழியில்லை. எனவே உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டிருப்பதை அனுபம்கெர் வாசித்தார்.

இதை அடுத்து அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இந்த உண்ணாவிரதம் மாலை முற்றுப் பேரும் என்றாலும், மாற்று அரசியலை உருவாக்கி தீருவேன் என்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் பேசியிருக்கிறார்.

இந்த மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இரண்டு வருடங்கள் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

.

கடைசியாக அரசியலில் மக்கள் மாற்று அரசியலை விரும்புவதால், தான் மாற்று அரசியல் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் அன்னா ஹசாரே ஜந்தர்மந்தரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயில் விபத்து:விசாரணை தீவிரம்


கடந்த திங்கட்கிழமை, அன்று நடந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு, மின்கசிவு காரணமில்லை என சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து இது நாசவேலை காரணாமாக ஏற்பட்ட சம்பவமா எனும் கோணத்தில் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் 20 வது இருக்கை எண்ணிலிருந்து 41 வது இருக்கைவரை முதலில் தீப்பிடித்தது என தெரிவிக்கப்படும் போதும், அங்கு செல்போன் சார்ஜ் போடும் வசதிகள் ஏதும் பொருத்தியிருக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மின்கசிவு காரணாமாக ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்திருந்தாலும், ஒரு சில நிமிடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுடன், உடனடியாக அனைவரையும் எரித்துச்சாம்பலாக்கும் வீரியம் உருவாக்கியிருக்காது என சந்தேகிக்கப்படுகிறது.

தீப்பிடித்த பெட்டிக்குள் ஏதேனும் அபாயகரமான வெடி மருந்துகள் யாரேனும் பெட்டிக்குள் வைத்திருந்து அது சிறு வெப்ப அழுத்தத்தினால் தீப் பிடித்து விபத்தாக மாறியிருக்கலாம் என்கிற கோணத்தில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

தீப்பிடித்து எறிந்த ரயில் பெட்டியில் முன்பதிவு செய்தவர்கள் பலரும் அன்று பயணம் செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த முன்பதிவு இருக்கைகளை டிடிஆர் வேறு சிலருக்கு ஒதுக்கிக் கொடுத்ததாகவும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண்ணிக்கைகளுக்கு அதிகமாகவே பயணிகள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி அவசரமாக டிக்கெட் வாங்கிப் பயணித்தவர்கள் பற்றி டிடிஆரையும் விசாரிக்கும் பொருட்டு தனிமையில் அவர் விசாரிக்கப் பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதில் யாரேனும் இந்த நாசவேலையில் ஈடுபட்டனரா எனும் கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.

எதிர்பாராது வைத்திருந்த வெடி மருந்தா, அல்லது நாசவேலை காரணமாக வெடி மருந்து வைக்கப் பட்டதா என்பது போகப்போக விசாரணையில் தெரிய வரும் என்றாலும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண் 20 , 41 க்கு இடையில் பெரிய ஓட்டை இருப்பதால் ஏதேனும் வெடிபொருட்களால் ஏற்பட்ட விபத்தாகத்தான் இருக்கும் என்பது தெரியவருவதால், நாசவேலை காரணமா என்கிற ரீதியில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிகிறது

புனேயில் அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு


புனே நகரில் நேற்று புதன்கிழமை 5 இடங்களில் அடுத்தடுத்து ஐந்து குண்டுகள் வெடித்துள்ளன. 6வது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் உள்துறை அமைச்சராக (Home Minister) சுஷில் குமார் ஷிண்டே பதவி ஏற்றதன் பின்னர் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றுக்குச் செல்லவிருந்த திட்டத்தை இவர் கைவிட்டார்.

போலிஸாரின் கவனத்தை திருப்புவதற்காகவும், பயம்காட்டுவதற்காகவும் வேண்டுமென்றே இக்குண்டுத்தாக்குதல்கள் திட்டமிட்டு  மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டுகள் பெரிதாக ஆபத்தானவையல்ல. அதிகளவு சக்தியில்லாத குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

புனே நகரின் மிகவும் பிஸியான ஜுங்க்லீ மஹாராஜ் வீதியில் இக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சாலையோர  குப்பைத் தொட்டியின் அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும், அடுத்து டெக்கான் சாலை, இதனை அடுத்து கந்தர்வா திரை அரங்கம் அருகில் என்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நியூடெல்லி மற்றும் மும்பையிலிருந்து புனே நகருக்கு விரைந்துள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு பெப்ரவரியில் புனே நகரிலுள்ள ஒரு பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 9 பேர் பலியாகியும் 57 பேர் படுகாயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், மத்திய அரசுக்கு ஒரு அபாய அறிவிப்பு, இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக  தெரிவித்துள்ளது

டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆதரவு அளிக்கவேண்டும்: கருணாநிதி


ஈழத் தமிழர்களின் காயத்திற்கும், துன்பத்திற்கும் மருந்து போடும் விதமாகத்தான் டெசோ மாநாடு நடத்த இருக்கிறோம்.
எனவே டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தை புரிந்து கொண்டு, மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
  
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக நடத்தப் படும் மாநாட்டில் சரத் பவார், சரத் யாதவ் போன்ற பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் பலரும் பல நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து இணையதளத்தில் தொடர்பு கொள்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி உயர்த்த இந்த டெசோ மாநாடு வழிவகை செய்யும் என்று தான் நம்புவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

Wednesday 1 August 2012

டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை

சி‌‌‌கி‌ச்சை‌க்கு வ‌ந்த இள‌ம்பெ‌ண் ஒருவரை ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை மதுரையில் ‌நட‌ந்து‌ள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ரிஷபம் கிராமத்தை சேர்ந்த ‌பிள‌ஸ் 2 மாண‌வி உமா (பெயர் மாற்ற‌‌ம்), நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட உமாவை பெ‌ற்றோ‌ர் ஊரு‌க்கு அழை‌த்து வ‌ந்தா‌‌ர்.

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌க்கு உமாவை அவரது தாத்தாவும், மாமாவும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். உமாவை பரிசோதனை செய்த டாக்டர் சங்கரநாராயணன் (52), டைபாய்டு காய்ச்சல் போல இருப்பதால் 3 நாட்களுக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறியு‌ள்ளா‌ர்.

இதனா‌ல் உமாவு‌க்கு காலையும், மாலையும் மரு‌த்துவமனை‌யி‌ல் குளுக்கோஸ் ஏற்றி ‌வீ‌ட்டி‌ற்கு அழைத்துச்சென்று வ‌ந்து‌ள்ளனர் தாதாவு‌ம், மாமாவு‌ம். நேற்று முன்தினம் மாலை உமாவு‌க்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தது. அ‌ப்போது, தாத்தாவும், மாமாவும் பழங்கள் வாங்குவதற்காக வெளியே சென்று‌வி‌ட்டன‌ர்.

அப்போது உமா அறை‌க்கு வ‌ந்த டாக்டர் சங்கரநாராயணன் உடல்நிலை குறித்து விசாரித்து‌ள்ளா‌ர். அப்போது வயிற்றுப்பகுதியில் வலிப்பதாக கூ‌‌‌றி‌யி‌க்‌கிறா‌ர் உமா. வயிற்றுப்பகுதியை கையை வை‌த்து ப‌ரிசோ‌தி‌‌த்த டாக்டர், திடீரென்று உமா ‌மீது பா‌ய்‌ந்து அவரை க‌ற்ப‌ழி‌த்து‌வி‌ட்டா‌ர்.

அல‌றி துடி‌த்த உமா‌வை ‌வி‌ட்டு‌வி‌ட்டு ஓடிய டா‌க்ட‌ர், ''உறவினர்களிடம் சொ‌ன்னா‌ல் கொலை செய்து விடுவேன்'' எ‌ன்று மிரட்டிவிட்டு வீட்டிற்கு செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

ப‌ழ‌ம் வா‌ங்‌கி‌வி‌ட்ட வ‌ந்த தா‌த்தா, மா‌மா‌விட‌ம் தன‌க்கு நே‌ர்‌ந்த கொடுமையை கூ‌றியு‌ள்ளா‌ர் உமா. இதனா‌ல் கொ‌‌தி‌த்தெழு‌ந்த உமா‌வி‌ன் தா‌த்தாவு‌ம், மாமாவு‌ம், ம‌ருத‌்துவமனை முன்பு ‌நி‌ன்று டா‌க்டரை வசைபாடியு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ன் கூ‌ச்சலை கே‌ட்டு அ‌க்க‌ம் ப‌க்க‌த்‌தின‌ர் கூ‌டின‌‌ர். ‌விப‌ரீத‌ம் அ‌திக‌ரி‌க்கவே டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌வீ‌‌ட்டை பூ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

மரு‌‌த்துவமனை‌யி‌ல் இள‌ம்பெ‌ண் க‌ற்‌ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட சம்பவம் கா‌ட்டு‌த்‌தீ போ‌ல் பர‌வியதா‌ல் எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். டாக்ட‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற போ‌லீசா‌ர் அவரை வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் ச‌ங்கரநாராயண‌ன் வெளியே வராததால், கதவை உடைத்து கொ‌ண்டு போ‌லீசா‌ர் உ‌ள்ளே புகு‌ந்து அவரை கைது செ‌ய்தன‌ர்.

பிடி‌ப்ப‌ட்ட காமவெ‌றி டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌மீது கற்பழித்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செ‌ய்ய‌ப்ப‌ட்டது. கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட டா‌க்டரை மதுரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி மா‌‌ரீ‌‌ஸ்வ‌ரி‌யிட‌ம் போ‌லீசா‌ர் ஆஜர்படுத்தினர்.

வரு‌ம் 14ஆ‌ம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்ட ‌நீ‌திப‌தி‌யிட‌ம், தான் டாக்டர் என்பதாலும், வருமான வரி செலுத்துபவர் என்பதாலும் தன்னை சிறையில் முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் கேட்டு‌ள்ளா‌ர்.

சிகிச்சைக்கு வந்த சிறுமியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பிரிவு வழங்க ‌‌நீ‌திப‌தி மறு‌த்து‌வி‌ட்டா‌ர். இதையடுத்து கைதிகளுடன் சிறையில் டாக்டர் சங்கரநாராயணன் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மதுரை பெரிய மரு‌த்துவமனை‌யி‌ல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்ப‌ட்டது.

சி‌க‌ி‌ச்சை‌க்கு வ‌ந்த ஒரு பெ‌ண் நோயா‌ளி‌யிட‌ம் காமவெ‌றி ‌பிடி‌த்த டா‌க்ட‌ர் இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டது டா‌க்ட‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ‌ஒரு பு‌னிதமாக மரு‌த்துவ தொ‌ழி‌ல் இ‌ப்படி‌ப்ப‌ட்ட டா‌க்ட‌ர்களா‌ல் கெடுவது வேதனையாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறது

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் : தமிழக அரசு


சென்னை, ஆக. 1 : தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அங்கன்வாடி மையங்களில், இணை உணவு, சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு, முட்டை, ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும்  அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு புரத சத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.  தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர்.  இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு  சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.இந்த அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக 16,645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சுற்றுச் சூழலுடன் கூடிய ‘புகையில்லா சமையலறை’ ஒன்று அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார். இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, 16,645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சமையலறை அமைக்கப்பட்டுள்ளன.தற்பொழுது இந்த ஆண்டு, அதாவது  2012-2013-ஆம் ஆண்டில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டாவது கட்டமாக 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.             மேலும் இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச் சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் முன்னோடித் திட்டத்தை துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக “ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

நிதிஅமைச்சரானார்ப.சிதம்பரம்


மத்திய அமைச்சரவையில் தற்போது சிறிய அளவிலான இலாகா மாற்றம் நடந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமர் ஏற்படுத்தியுள்ள இத்தற்காலிக மாற்றத்தின் படி உள்துறை அமைச்சர் பொறுப்பை சுஷில்குமார் ஷிண்டேவுக்கும், சுஷில் குமார் வகித்த மின்துறையை வீரப்ப மொய்லிக்கு கூடுதல் பொறுப்பாகவும் பிரித்துக் கொடுத்துவிடப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சர் பொறுப்பு  ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிகாரப் பூர்வத் தகவல்களாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவிக்கிறது. தற்போது இச்சிறிய சிறிய அளவிலான இலாகா மாற்றம் போதும். அமைச்சரவை விரிவாக்கம் பற்றி செப்டெம்பரில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தலைமை முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுக்கள் அச்சுறுத்தல், தேசிய அளவில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடியாமல் போனது. அசாம் இன மோதலை தடுக்க தவறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவதாலும்,
இதையடுத்தே அவரை நிதி அமைச்சராக அரசு நியமித்திருக்கலாம் என கூறப்படுகிறது. கனவு பட்ஜெட் நாயகன் என வட மாநிலத்தவரால் ப.சிதம்பரம் அழைக்கப்படுகின்றார். ஏற்கனவே இரு முறை நிதி அமைச்சராக இருந்துள்ள ப.சிதம்பரம், கடந்த சில வருடங்களாக இந்தியா சந்தித்து வரும் குறைவான பொருளாதார வளர்ச்சி வீதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார் என தொழில் வர்த்தக துறையினர் எதிர்பார்த்துள்ளனர். இதே போன்று மின்சார துறை அமைச்சு பதவியிலிருந்து சுஷில் குமார் ஷிண்டே  மாற்றப்பட்டதற்கும் அவர் அத்துறையில் திறம்பட செயற்படாமல் போனதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வீரப்ப மொய்லிக்கு மின்சாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. மொய்லி முன்னர் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர் கம்பெனி விவகாரத்துறை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிகைப்பற்றியது


இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 251 ஓட்டங்களை எடுத்தது. குமார் சங்ககார இப்போட்டியில் விளையாடவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க 51 ஓட்டங்களையும். திரிமனே 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். பந்து வீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. விராத் கோலி 128 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா 58 ஓட்டங்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சுரேஷ் ரைனா இத்தொடரில் எடுத்த மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். விராத் கோலி இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி ஆகஸ்டு 4ம் திகதி நடக்கவிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும் என்று, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், "குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும். இதனால், தேர்தலில் நிற்பவர்கள் தோற்பார்கள் என்பது கருத்தல்ல. குடியரசுத் தலைவரால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே எங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறோம்.
  
அதிமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. எந்த நலத் திட்டங்களும் ஒழுங்காக மக்களை சென்று அடைவதில்லை. எனது பிறந்தநாளில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது மக்களுக்காக சில நலத்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறேன்" என்று கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Tuesday 31 July 2012

அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.


தமது ஆதராவாளர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
   அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சாதகமாக செய்திகள் வெயிடவில்லை என்று அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் சிலர் பத்திரிகையாளர்களைத் தாக்கிய சம்பவம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து தமது ஆதரவாளர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட அன்னா ஹசாரே, இத்தாக்குதலுக்கு அவர்கள் சார்பாக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது ஆதரவாள்களை வன்முறையில் இறங்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
     "அரசு தரப்பில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் தயாராக இல்லை, அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். அரசியல் வாதிகளின் ஊழல் நாட்டை சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்" என்று அன்னா ஹசாரேவின் குழுவினரான சாந்தி பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புது தில்லி : சமீபத்திய தீடீர் மின் தடையை தொடர்ந்து இன்று தீடீரென்று இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு செல்லும் மின்சார கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 19 மாநிலங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி, அஸ்ஸாம், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் மின் தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரயில்கள் மின் தடையால் இயங்க வழியின்றி அப்படியே நிற்கின்றன. தில்லி சாலைகளில் சிக்னல்கள் வேலை செய்யாததால் போக்குவரத்தை சமாளிக்க 4000 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சப்தர்ஜங்க் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு உடனடி முயற்சி எடுத்து பூடானிலிருந்து மின்சாரம் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளனர். தில்லி மெட்ரோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் இயக்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் நிற்கின்றனர். உடன் மின்சார இணைப்பு கொடுக்கப்பட தாம் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் சுஷில் குமார் சிண்டே தெரிவித்துள்ளார்.


Monday 30 July 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து


நெல்லூர்: ‌டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30க்கும் மேல பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில்  தீயில் சிக்கி இறந்தது 20 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் அடங்குவர். இதுவரை 28 உடல்கள் ரயிலில் இருந்து எடுக்கப்பட்டள்ளதாக மாவட்ட எஸ். பி., தெரிவித்துள்ளார்.

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.
தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம்: காயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம் வருமாறு: ரேகா, வீணா, சாம்பசிவாராவ், வர்மாசிறீஸ், வெங்கடகோடேஸ்வரராவ், வர்மா ஹூசேன்,ராகவன், சுனில்குமார், ஹர்சித், சந்தீப்அக்னிதோத்ரி, அமீர் பிரீத்சிங். ஆகியோர் நெல்லூர் ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பலியானவர்கள் யார்? யார்? : இந்த ரயிலில் தீ பிடித்து எரிந்துள்ளதால் இதில் பலியானவர்கள் யார் ? யார் என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற தகவலை தவிர பெயர் விவரம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

விபத்தில் தப்பியவர்கள் பேட்டி: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச் தவிர ஏனைய பெட்டிகளுடன் ரயில் சென்னைக்கு காலை 11. 35 மணியளவில் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகள் கூறுகையில்: விபத்து நடந்தபோது காலையில் மழை மற்றும் பனி காரணமாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் புகை மூட்டத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அலறல் சப்தம் கேட்டது. பலர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றனர்.

ஆந்திர முதல்வர் விரைகிறார்: சம்பவம் நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசரமாக விரைந்துள்ளார். விபத்து ஏற்பட்ட விவரம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேரில் விசாரித்து காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். சென்னைக்கு வந்து பின்னர் நெல்லூர் கிளம்புகிறார்.
ஒரு உயிருக்கு 5 லட்சம் நிவாரணம்: விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கொள்ள : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398 ,என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஒரு ரயில் அனுப்பிவைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விவரம் கேட்க வேண்டுமானால் கீழ் வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 0861- 2330024, 0861-2328500

Friday 27 July 2012

சென்னை, ஜூலை.28 - தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், அவர்கள் வழங்கும் பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளிலுள்ள பழமையான இயந்திரங்களை மாற்றி உற்பத்தித்திறனை அதிகரிக்கும்  வகையில் மானியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும்  இன்றியமையாத தொழிலாக விளங்கும் தேயிலைத் தொழில் தழைப்பதற்கும், தேயிலைத் தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.  
2001​ஆம் ஆண்டு  பச்சைத் தேயிலையின் விலை கடும் விழ்ச்சி அடைந்திருந்தபோது, அதனை சீரமைக்கும் வகையில்,  அரசு நிறுவன மூலம் `தயாரிக்கப்பட்ட  டீயை ஏல மையங்களில் மாதந்தோறும் 200 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்து, அதனை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டதையடுத்து,  இந்த டீ,  ஊட்டி டீ என்ற பெயரில் 28.8.2001 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று,  உலகிலேயே முதல் முறையாக சிறு தேயிலை  விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் டீ சர்வ என்ற தேயிலைக்கான மின்னணு ஏல மையம் ஒன்று   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் 13.9.2003 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் 2005​ஆம் ஆண்டு தேயிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியிலிருந்து சிறு தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்க சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் என்று ஒரு திட்டத்தினையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
அந்த வகையில், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற 15 தொழிற் கூட்டுறவு  தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள 22,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்காக  கிலோ ஒன்றுக்கு சராசரியாக வழங்கப்பட்டு வந்த 6 ரூபாய் என்ற விலையை  தனியார் நிறுவனங்களில் பசுந்தேயிலைக்கு வழங்குவதுபோல்  8 ரூபாய் என உயர்த்தி வழங்க   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்தத் திட்டம் 2012 ​ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பழமையான இயந்திரங்கள் உள்ள காரணத்தால், அவை சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கும் கட்டுப்படியான விலை சந்தை விலையை விட குறைவாக உள்ளது. எனவே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வழங்கும் சிறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால், அவர்களுக்கு சந்தை விலையை அனுசரித்து விலை வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்  தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை கூடுதலாக  ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும்,  நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 12 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு குறைவாக உள்ள  காரணத்தால் பழமையான இயந்திரங்களை மாற்றி, அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்  மற்றும் தேயிலையின் தரத்தினை மேம்படுத்தவும் மூலதன செலவாக 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இண்ட்கோ சர்வ தனது சொந்த நிதியிலிருந்து பழுதடைந்த கட்டடங்களை 54 லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்ப்பதற்கும் அனுமதி அளித்தும் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday 25 July 2012


2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்

சென்னை : வேகமாக சென்ற பள்ளி பஸ் ஓட்டையிலிருந்து தவறி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பள்ளி பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு பிரனவ் (9), ஸ்ருதி (6) என்ற 2 குழந்தைகள்.
 சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ருதி 2ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ருதி தினமும் வீட்டில் இருந்து தந்தையின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து பள்ளி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து அப்பாவின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்த ஸ்ருதி, பின்னர் பள்ளி பஸ்சில் சென்றாள். மாலையில் வகுப்பு முடிந்த உடன் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பஸ்சில் 60 மாணவ, மாணவிகள் இருந்தனர்.

 உள்ளே இருந்த மாணவிகள் தங்களுக்குள் சீட் மாறி விளையாடினர். அந்த பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்தது. பஸ் சென்ற வேகத்தில், சிறுமி ஸ்ருதி நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.
.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர். வேகமாக சென்ற பஸ்சை வழிமறித்து தடுத்து நிறுத்தி, டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் அடங்காமல், குழந்தைகள் அனைவரையும் இறக்கிவிட்டு, பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர். தகவல் அறிந்து தாம்பரம், பீர்க்கன்கரணை போலீசார் சம்பவ இடம் விரைந்து மாணவியின் சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பையை சேர்ந்த பஸ் டிரைவர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், பள்ளி தாளாளர் விஜயன் ஆகிய இருவரையும் பிடித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாம்பரத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து எரிந்து கொண்டிருந்த பஸ் தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடானது. பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





.


.








பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது : தமிழக முதலமைச்சர்

கொடநாடு, ஜூலை 25 : கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் கோடநாடு காட்சிமுனை ஏ.டி.எம். மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளை ஆகியவற்றை திறந்து வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். அதில், 1906 ஆம் ஆண்டு, 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் 50 பணியாளர்களுடன் தனியாரால் துவங்கப்பட்ட பாங்க் ஆப் இந்தியா இன்று இந்தியாவில் 4,041 கிளைகளையும், வெளிநாடுகளில் 34 கிளைகளையும் கொண்டு மகத்தான மக்கள் பணி ஆற்றி வருகிறது. 1989 ஆம் ஆண்டிலேயே ஏ.டி.எம். வசதியுடன் கூடிய கணினிமயம் ஆக்கப்பட்ட கிளையை துவக்கிய பெருமை இந்த பாங்க் ஆப் இந்தியாவிற்கு உண்டு. இந்திய நாட்டிற்கு வெளியே முதன் முதலாக 1946 ஆம் ஆண்டு லண்டனில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும், 1974 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பிய நாட்டில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும் இந்த வங்கிக்கு உண்டு.  மொத்தத்தில் அலுவல் ரீதியாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியா பிரதான இடத்தை வகிக்கிறது.இந்த வங்கியின் மூலம் இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்குத் தேவையானவற்றை பெற வேண்டும், சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.“சிறு துளி பெரு வெள்ளம்”, “சிறுகக் கட்டி பெருக வாழ்”  போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன. “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் வாக்கு. பொருளைப் பெறாவிட்டால் பட்டறையில் இரும்பு படுவது போன்று துன்பப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இங்குள்ள மக்கள் எல்லாம் சேமிப்பில் ஈடுபட வேண்டும். ஒரு மலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் ஆறு, பயனில்லாத இடங்கள் வழியாக பாய்ந்து கடலில் கலப்பதால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்நீர் அணைகளில் தேக்கப்பட்டு, வாய்க்கால் வழியாக, வயல்களுக்குப் பாய்ந்தால் பயிர் செழிக்கும், உயிர்கள் வாழ வழிவகை ஏற்படும். அது போல, ஒரு மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய பணத்தை தனக்கும் தன் நாட்டிற்கும் பயன்பட சேமித்தல் அவசியம். சிறுசேமிப்பின் மூலம் பணம் வீணாகாமல் பெருகுவதோடு, வட்டியும் கிடைக்கிறது; பணம், பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்த சேமிக்கும் பழக்கம் சிக்கனத்தை வளர்ப்பதோடு, எதிர்பாராச் செலவுகளுக்கும் கைகொடுக்கிறது. நாம் சேமிக்கும் பணம் நாட்டின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சேமிப்பினை இப்பகுதி மக்கள் எல்லாம், வளர்த்துக் கொள்ள வேண்டும். வங்கியில் பணத்தை சேமித்து, அதன் பயன்களை, நீங்கள் அடைய வேண்டும். இது மட்டுமல்லாமல், விவசாயக் கடன், வணிகக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றையும், இந்த வங்கியிடமிருந்து பெற்று, உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் எல்லாம், வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்திலே உண்டு.  பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை ஆகியவற்றை வாங்க இயலும். ஆனால் அவை மட்டுமே நமக்கு தூக்கத்தை கொடுக்காது.  பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்க இயலும்.  ஆனால் பணம் பசியை ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டால், அதனை சரி செய்வதற்கு மருந்து மாத்திரைகளை பணத்தால் வாங்க இயலும்.  அழகு சாதனைங்களை பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது.  எனவே, பணத்துடன் கூடிய நல்ல மனமும் வேண்டும்.  அதுவே எப்பொழுதும் நமக்கு நல்ல மகிழ்ச்சியை தரும்.ஓர் ஊரில் வசதி படைத்த பள்ளிச் சிறுமி ஒருத்தி தனது தந்தையுடன் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றாள். அங்கு தனக்கு பிடித்த விளையாட்டுப் பொம்மைகளை அவள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், தனது அருகில் வசதி குறைந்த ஏழைச் சிறுமி ஒருத்தி, விலை குறைந்த பொம்மைகளை, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, தனது தந்தையை நோக்குவதையும்; அந்த பொம்மைக்குரிய பணம் தன்னிடம் இல்லை என அவளது தந்தை தலையாட்டுவதையும்; இதனால் அந்த ஏழைச் சிறுமியின் முகம் வாட்டம் அடைவதையும் கடைசியாக ஒரு சாதாரண பொம்மையை எடுத்துக் கொண்ட ஏழைச் சிறுமியின் முகத்தையும் கவனித்தாள் பணக்காரச் சிறுமி.இதனைக் கண்டு மனம் நெகிழ்ந்த பணக்காரச் சிறுமி தனக்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டதுடன் அந்த ஏழைச் சிறுமி ஏக்கத்துடன் பார்த்து திருப்பி வைத்துவிட்ட பொம்மைகளையும் எடுத்துக் கொண்டாள். பின்னர், பணம் செலுத்தும் இடத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்த பணக்காரச் சிறுமி, கடைக்காரரிடம் ஏதோ ரகசியமாக கூறினாள்.  ஒரு சாதாரண பொம்மைக்கான பணத்தை ஏழைச் சிறுமி கடைக்காரரிடம் செலுத்தியவுடன் கடைக்காரர் அந்த சிறுமியிடம், “இன்று 500-ஆவது வாடிக்கையாளருக்கு, நாங்கள் பரிசு ஒன்றை தர முடிவு செய்திருக்கிறோம்.  நீ தான் அந்த 500-ஆவது வாடிக்கையாளர்” எனக் கூறி, பணக்காரச் சிறுமி விலை கொடுத்திருந்த பொம்மைகளை ஏழைச் சிறுமிக்கு வழங்கினார்.இதில் ஏழைச் சிறுமிக்கு, ஏற்பட்ட சந்தோஷத்தை பார்த்து மன மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன் அந்த பணக்காரச் சிறுமி கடையை விட்டுச் சென்று தனது காரில் ஏறிக் கொண்டாள். பணம் கொடுத்து தான் வாங்கிய விளையாட்டுப் பொருட்களினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சியை அந்த ஏழைச் சிறுமியின் சிரிப்பில் கண்டாள் பணக்காரச் சிறுமி. பிறருக்கு கொடுத்து உதவுவது தான், நமக்கு உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இது போன்ற உண்மையான மகிழ்ச்சியை வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படுத்தும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வங்கி அதிகாரிகள், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் வகையில் குறைந்த வட்டியில் அதிக தவணை முறையில் அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க வேண்டும். இதே போன்று, கடன் பெறுவோரும், வாங்கிய கடனை, தவறாமல் திரும்பச் செலுத்தி, மேலும் பல பயன்களை வங்கி மூலம் பெற வேண்டும். இந்தக் கொடுக்கல் – வாங்கலில்இரு சாராரும் தங்கள் மனசாட்சிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.ஒருத்தர், விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டார். பயிற்சி முடிந்து தனியாக விமானம் ஓட்ட வேண்டிய கட்டத்தில் பாரசூட் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.அதனால் இவர் ஒரு கடைக்குப் போனார். “ஒரு நல்ல பாரசூட் கொடுங்க”, என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் பாரசூட்டை அவரிடம் கொடுத்தார். அந்தப் பாரசூட்டை வாங்கிய நபர்,  “ஐயா, நான் இதை வாங்கிக் கொண்டு போகிறேன். நல்லதாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்துத் தந்தால், நலமாக இருக்கும். ஒருக்கால் நான் மேலே இருந்து குதிக்கும் போது  இந்தப் பாரசூட் வேலை செய்யவில்லை என்றால் பிரச்சனையாகி விடும் அல்லவா?” என்று கூறினார்.       உடனே அந்தக் கடைக்காரர், அவரைப் பார்த்து, “சார், அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். அப்படி நீங்கள் குதிக்கிற போது, இந்த பாரசூட், சரியாக விரியவில்லை என்று சொன்னால் உடனே திருப்பி எடுத்துக் கொண்டு வாங்க நான் வேறு ஒன்றை மாற்றித் தருகிறேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். இது எப்பேர்பட்ட மனசாட்சி! பாரசூட் விரியவில்லை என்றால், அத்துடன் விமான ஓட்டியின் கதையே முடிந்துவிடும். உயிர் பிரிந்துவிடும்.  பின்னர் எப்படி அவர் கடைக்குச் சென்று வேறு பாரசூட்டை வாங்க முடியும்?  இதுவா மனசாட்சி? இது போல் இல்லாமல் உண்மையான மனசாட்சியுடன் வங்கி அதிகாரிகளும், வங்கி வாடிக்கையாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை ஆகியவை வங்கிகள் மூலமாகவே தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசுக்கு வரிகள் மற்றும் இதர இனங்கள் மூலம் வர வேண்டிய வருமானம் வங்கிகள் மூலமாகவே பெறப்படுகிறது. எனது அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வங்கிகளில் பெருமளவில் வணிக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளும், ஏற்றத்தாழ்வற்ற, சமதர்ம சமுதாயம் அமைப்பதற்காக பாடுபடும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.விவசாயம், தொழில், வணிகம், சிறுதொழில், பொருளாதாரம் முதலியன செழிக்கும் வண்ணமும், மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வண்ணமும், இந்த வங்கியின் பணிகள் அமைய வேண்டும் என்றும், ஈளாடா கிளை, இந்தியாவிலேயே சிறந்த கிளை என்ற நற்பெயரை எய்த வேண்டும் என்றும் வாழ்த்தி, இது போன்ற பல ஏ.டி.எம். மையங்களையும், புதுக் கிளைகளையும் தமிழ்நாட்டிலே பாங்க் ஆப் இந்தியா துவக்கி, மக்களுக்கு மேன்மேலும் நற்பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு;இந்த விழா, சீரும் சிறப்பும் மிக்க, நிகழ்ச்சியாக அமைந்திட பணியாற்றிய  வங்கி அதிகாரிகளுக்கும், இந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும், காவல் துறையினருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை உரித்தாக்குகிறேன் என்று பேசினார்.

Monday 23 July 2012

23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும்ஜெயலலிதா,

சென்னை, ஜூலை 23 : ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது குறித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 21ம் தேதியன்று ராமேஸ்வரத்தில் இருந்து 5 இயந்திரப் படகுகளில் கட்சத் தீவுப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு உரிமை வாய்ந்த கச்சத் தீவில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினர் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். அதிலும், மீன்பிடி தடைக் காலம் முடிந்த பிறகு இது அதிகரித்துள்ளது என்று ஏற்கெனவே உங்களுக்குக்  குறிப்பிட்டுள்ளேன்.இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அடிப்படை வாழ்வாதாரமான மீன் பிடி தொழிலே கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது மட்டும் இலங்கை கடற்படையினர் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற அராஜகப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.எனவே, இந்த நடவடிக்கையில் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்னை மீது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday 22 July 2012

பிரணாப் முகர்ஜி25ம் தேதி13வது ஜனாதிபதியாகபதவியேற்கவுள்ளார்

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
ஜனாதிபதியாக உள்ள பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. ஆளும் ஐ.மு., கூட்டணி சார்பில், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி,76, போட்டியிட்டார். இவருக்கு, கூட்டணி கட்சிகளைத் தவிர, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆதரவு தெரிவித்தன.தே.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிட்டார். இவருக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., அகாலி தளம் மற்றும் கூட்டணியில் இல்லாத, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்தன.
:பார்லிமென்ட் வளாகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களான பிரணாப், சங்மா முன்னிலையில், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. முதலில், எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுப் போட்ட, 748 எம்.பி.,க்களில், 527 எம்.பி.,க் களின் ஓட்டுகள், பிரணாப்புக்கு ஆதரவாக கிடைத்தன. சங்மாவுக்கு, 206 எம்.பி.,க்களே ஓட்டளித்திருந்தனர். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
முன்னிலை:மாநிலங்கள் வாரியாக எண்ணப்பட்ட ஓட்டுகளிலும், பிரணாப் முகர்ஜியே தொடர்ந்து முன்னிலை வகித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பா.ஜ., ஆளும் கர்நாடகாவில், சங்மாவை விட, பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் அனைத்தும், பிரணாப் புக்கே பதிவாகியிருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்மாவுக்கு, 148 ஓட்டுகளும், பிரணாப்புக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன. நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுகளும், நேற்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. இதில், செல்லுபடியான, 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 ஓட்டுகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 763
ஓட்டுகளை பெற்று (69.3 சதவீதம்), பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.
சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978ஓட்டுகள் கிடைத்ததாக,
தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப்
பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே
துவங்கி விட்டன.
  மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார்.
:
பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர் என,  கூறினார்.

Saturday 14 July 2012


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை கருணாநிதியின் குற்றசாட்டுக்கு தமிழக அரசு பதில்


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்துகொண்டிருக்கிறது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பட்டிருக்கிறது. அதோடு, 1851 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பில் இருப்பதாகவும்,மேலும்  போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஏரிகளின் சீரமைப்புப் பணி, மற்றும், திருவள்ளூரில் புதிய நீர்தேக்க ஏரிகள் அமைக்கும் பணி நடப்பதாகவும், சோழவரம் ஏரியை ஆழப் படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை

ஜகதீஷ் ஷட்டர் நேற்று புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டபின்னும்,
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. உடுப்பி மாவட்ட எம் எல் ஏ, ஸ்ரீனிவாச ஷெட்டி மூலம் மேலும் குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.
     
ஜகதீஷ் ஷட்டர், முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டபின், ஸ்ரீனிவாச ஷெட்டிக்கு, மந்திரி பதவி கொடுப்பதாக தலைமை பாஜக அறிவித்திருந்ததாகவும், ஆனால், புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகள் பட்டியலில் ஸ்ரீனிவாச ஷெட்டியின் பெயர் வாசிக்கப் படவில்லை என்று தெரிந்ததுமே, ஷெட்டி கதறி அழுதுவிட்டதாகவும் தெரிகிறது.
     
தனது தொகுதியில் நலத்திட்டங்களை நல்லபடியாக செய்து வந்ததால்தான், தான் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், அப்படிப்பட்ட தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை, எப்படி நான் எனது தொகுதி மக்களின் முகத்தில் விழிப்பேன் எனக் கூறி, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டுத்தான் திரும்ப ஊருக்கு செல்வேன் என்றும் ஸ்ரீனிவாச ஷெட்டி காத்திருப்பதாகத் தெரிகிறது.
     
இதற்கிடையில், ஸ்ரீனிவாச ஷெட்டி தொகுதி மக்கள் நேற்று முதலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் கடை அடைப்பு போன்ற எதிர்ப்புக்கள் இன்று நடந்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இவரைப்போலவே குமாரசாமி எம் எல் ஏ போன்ற 4 எம் எல் ஏ க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று கூறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆளுனரை சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Saturday 7 July 2012

இந்தியாவின் எப்பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது : ஜெயலலிதா

இலங்கைவ் விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தாம்பர விமானநிலையத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும், அவர்கள் விமானம் மூலம் பெங்களூரின் எலகங்கா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடரவிருப்பதாகவும் தகவல் முரண்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜெயலலிதா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது வாய் மூடி மவுனியாக உள்ள மத்திய அரசு தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இலங்கை நாட்டின் ஒன்பது விமானப்படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத காலம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை 5.7.2012 அன்று தெரிவித்து இருந்தேன்.

தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் இது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் நான் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தன.

தமிழர்களுக்காகவே பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு தலைவர் ''அந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும்'', என்று இது குறித்து பட்டும் படாமலும், வெறும் வாய் வார்த்தையாக பதில் அளித்து இருக்கிறார்.

எனினும், இலங்கை நாட்டின் விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, இலங்கையின் ஒன்பது விமானப்படை வீரர்களையும் பெங்களூரூவிலுள்ள எலகங்கா விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 6.7.2012 அ‌ன்று விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் ஆகும். இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கூறினார்.

Friday 6 July 2012

தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது


தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது.
இதில் 2010ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யவுள்ளதுடன், இன்னும் பல முக்கிய முடிவுகள் குறித்தும், முக்கிய மசோதாக்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக, பின்தங்கிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படலாம் எனவும், ஏற்கனவே தேசிய ஆலோசனை குழு சமர்பித்திருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகிறது.
    
மேலும் முறைசாராத் தொழில் செய்பவர்கள், மற்றும் சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் இவர்களுக்கு ஓய்வூதியத்துடன் காப்பீட்டுத் திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற பலமுக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன

Sunday 17 June 2012

தனியாரிடம் இருந்து மின்சாரம் பெற்றால் மேலும் கட்டணம் உயருமா ??

மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தனியார் நிருவனகளில் இருந்து மின்சாரம் பெற முடிவு செய்துள்ளது, இந்த முடிவால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் அதிகம் ஏற்படும். இந்த நஷ்டத்தை சரிகட்ட சில மடங்குகள் கட்டணத்தை உயர்த்திவிட்டால் , பயனர்களுக்கு இது மேலும் பெரிய சுமையாக அமைந்து விடும். இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பது தான் உண்மை.

11000 மெகாவாட் தேவை அனால் 8000 வாட் மட்டுமே உற்பத்தி ஆகின்றது. 2500 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது. அனால் , பல இடங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி விட்டதால், மழை ஏமாற்றினாலும், காற்று நன்றாக வீச தொடங்கி உள்ளது. அதிலிருந்து மின்சாரம் சுமார் 3000 மெகாவாட் வரை கிடைப்பதால் இப்பொழுது சில இடங்கள் மின் வெட்டு நேரங்களை கம்மியாக சந்திக்கின்றன.

சில இடங்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளி மாநிலங்களிடம் இருந்தும், மின் வாரியம் வாங்கி வருகிறது,.

இப்போது 2012-13-ம் ஆண்டு மின் தேவையைக் காரணம் காட்டி வெளி மாநிலங்களிலிருந்து 1,079.8 மெகாவாட், தமிழகத்தைச் சேர்ந்த பிற தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 683.3 மெகாவாட், ஒப்பந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து 420 மெகாவாட் என மொத்தம் 2,183.1 மெகா வாட் மின்சாரத்தை ரூ.13,175 கோடிக்கு வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.

பல வெளிமாநில மின்சார வாரியங்கள், எல்லை பகுதிகளில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ 4 க்கு விற்க முன்வந்துள்ளனர். அனால் தனியார் நிறுவனங்கள் ரூ 6 க்கு விற்கின்றன. 
தனியார் நிறுவனங்கள் கோரியபடி 683.3 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 6.30 என்ற விகிதத்தில் வாங்கினால், அவர்களுக்கு மின் வாரியம் ரூ.4304.79 கோடி கட்டணம் செலுத்த வேண்டி வரும்.  இந்த மின்சாரம் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் மின் இழப்பையும் கணக்கிட்டால், இந்த 683.3 மெகாவாட் மின்சாரத்தின் விலை பயனீட்டாளர்கள் முனையில் ரூ.7,662.53 கோடியாக உயரும்.

மின்சார திட்டங்கள் பல தொடங்கபடாமல் உள்ளதால், மின் உற்பத்தி  செய்யபடாமல் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், மேட்டூரில் தொடங்க வேண்டிய மின்சார உற்பத்தி 600 வாட் கொடுக்கும் இந்த ஜூன் இல் என எதிர்பார்த்தது, அனால் அது செப்டெம்பரில் தான் தொடங்கும் என தெரிகிறது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டு இருக்கிறது. இல்லையேல், வாங்கும் மின்சாரத்திற்கு கட்டணம் உயர்ந்தால், பயனர்கள் மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாமல் திணறிபோய் விடுவார்கள்.



ஸ்டெம் செல் சிகிச்சை

ஸ்டெம் செல் என்னும் முறையின் மூலம் பல சிகிச்சைகள் வெற்றி பெற்று வருகின்றன. சுசித்ரா ஹோல்கர்சன் என்ற ஒரு மருத்துவர் சுவீடன் நாட்டு சிறுமியின் ரத்த நாளத்தை வளர்த்து அதை பொருத்தி சிகிச்சையை வெற்றி பெற செய்துள்ளார். உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் இவர் மிகவும் அனுபவம் உடையவர்.

பத்து வயது சுவீடன் நாட்டு சிறுமிக்கு கல்லீரலின் ரத்த நாளங்கள் நாசமானதால், அவருக்கு ரத்தநாளங்களை புதிதாக பொருத்தும் எண்ணம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. சிறுமியின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்தால் பருவ வளர்ச்சி செரியாக ஏற்படாமல் போகலாம் என கருதி உறுப்புகளை தானம் செய்தவரின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்து அந்த செல்களை அகற்றிவிட்டு இந்த சிறுமியின் உடலுக்கு ஏற்றாற்போல் அதனை  வடிவமைத்து
அடை காக்கும் கருவியின் மூலம் அதனை வளர்த்து சிறுமியின் உடலில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பொருத்தினர். அவர் இப்பொழுது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அனால் இந்தியாவில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மிக மிக குறைவு. நிறைய மருத்துவர்களுக்கு அதைப்பற்றி சரியான கண்ணோட்டம் இல்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏற்றார் போல் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அதற்கு தேவையான வசதிகள், படிப்பு மற்றும் கருவிகள் இந்தியாவில் இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. குழந்தைகளின் ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். பல ரத்த வங்கிகள் இதை பணம் வாங்கிகொண்டு செய்கின்றன. அதை இன்கிபடோரில் வைத்து அந்த ரத்ததை காத்து ஸ்டெம் செல்களையும் காக்கின்றனர்.

அனால் மருத்துவ கவுன்சிலின் படி எந்த தெளிவான முடிவும் இப்பொழுது செரியாக எடுக்கப்படவில்லை. சில நேரங்களில் தொப்புள்கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தநாளங்கள் கேட்டு போய்விடுங்கின்றன. இதை தடுக்க வேண்டும் , அப்படி நடந்துவிட்டால் அதனை சரி செய்வதற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அரசு முடிவு செய்ய வேண்டும்.

இந்த ஸ்டெம் செல் சிகிச்சை நல்லதொரு வரம் இந்த மனிதகுலத்திற்கு. இதனை மிகுந்த பொறுப்புடனும் , கடமையுடனும் மருத்துவர்களும், ரத்த வங்கிகளும் ஏற்று சரியாக செய்ய வேண்டும் என்பது இந்த சிகிச்சைக்கு வைக்கப்படும் முக்கியமான நிபந்தனை.